யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 15 மே, 2014

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள்

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள்
கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம்.
தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.
தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.
காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.
நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.
பண்ணை அமைக்கும் முறைகள்:
நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.
பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.
காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:
குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.
ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.
குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.
ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.
-நன்றி-இணைப் பேராசிரியர் & தலைவர் எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மைய்யம். -திண்டுக்கல்.

கருத்துகள் இல்லை: